» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திராவில் பஸ் தீவிபத்தில் 20பேர் உயிரிழப்பு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!

வெள்ளி 24, அக்டோபர் 2025 11:39:54 AM (IST)



ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே ஆம்னி பஸ்சில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கர்நாடகாவின் பெங்களூருவுக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 42 பேர் பயணித்தனர். ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே சின்ன டிக்கூர் பகுதியில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த பைக் மீது ஆம்னி பஸ் மோதியது. 

இந்த விபத்தில் ஆம்னி பஸ்சில் தீ விபத்து ஏற்பட்டது. தீ பஸ் முழுவதும் மளமளவென பரவிய நிலையில் அதில் உறங்கிக்கொண்டிருந்த பயணிகள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். பல பயணிகள் தங்கள் உயிரை காத்துக்கொள்ள பஸ்சில் இருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்தனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சிலரை படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஆந்திராவில் பஸ் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதி முர்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஆந்திர மாநிலம் கர்னூலில் ஏற்பட்ட பஸ் தீ விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், கர்னூலில் ஏற்பட்ட பஸ் தீ விபத்தால் மிகுந்த கவலையடைந்துள்ளேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் உறவினர்களை இழந்த குடும்பத்தினருக்கு நான் துணை நிற்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory