» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விஷ சாராய மரணங்களில் ஆளும் கட்சிக்கும் தொடர்பு : நிர்மலா சீதாராமன்

திங்கள் 24, ஜூன் 2024 8:26:13 AM (IST)

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்தில் மாநில போலீசார் விசாரணையில் உண்மைகள் வெளிவராது என்பதால், சி.பி.ஐ. விசாரணை தேவை என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த விஷ சாராய மரணங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தாலும் கூடுதல் நடவடிக்கைகள் தேவை என பலராலும் வலியுறுத்தப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று இது தொடர்பாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு மாநிலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், 200-க்கு மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்து உள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இத்தனை மரணங்கள் நிகழ்ந்த பிறகும் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட எவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

தமிழ்நாட்டை பொறுத்தவரை டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுவகைகள் தாராளமாக கிடைக்கும்போது விஷ சாராயம் எப்படி கிடைக்கிறது? என தெரியவில்லை. எனவே இந்த விஷயத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரம் குறித்து தமிழக சட்டசபையில் விவாதத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. விஷ சாராய மரணங்களுக்கு தமிழகத்தை ஆளும் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டுகிறேன். 

எனவே தான் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என பா.ஜனதா சார்பில் வலியுறுத்துகிறேன் அப்போதுதான் உண்மைகள் வெளியே வரும். மாநில போலீசாரின் (சி.பி.சி.ஐ.டி.) விசாரணையில் உண்மைகள் முழுமையாக வெளிவராது. தமிழ்நாட்டில் மதுவிலக்கை நீக்கியதே தி.மு.க. தான். தற்போது தமிழ்நாட்டில் மது ஆறாக ஓடுகிறது. குடியிருப்பு பகுதியில் விஷ சாராயம் காய்ச்சியது தான் வேதனை தருவதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory