» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
வியாழன் 2, டிசம்பர் 2021 10:13:50 AM (IST)
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து குளிர்காலக் கூட்டத் தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி திங்கள்கிழமை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் அறிமுகம் செய்தாா்.
வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மீது நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனா். இரு அவைகளும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததையடுத்து, நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாவிற்கு இன்று அவர் ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் 3 புதிய வேளாண் சட்டங்களும் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்ட நிலையை அடைந்துள்ளது.