» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உபியில் பால் டேங்கர் லாரி மீது பஸ் மோதியதில் 18 பேர் பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

வியாழன் 11, ஜூலை 2024 8:25:07 AM (IST)

உத்தரபிரதேசத்தில் பால் டேங்கர் லாரியின் பின்புறத்தில் பஸ் மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பீகார் மாநிலம் மோதிஹரியில் இருந்து டெல்லிக்கு ஒரு மாடி பஸ் புறப்பட்டு சென்றது. அது, படுக்கை வசதி கொண்ட பஸ் ஆகும். நேற்று அதிகாலை 5 மணியளவில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையில் உன்னா மாவட்டம் ஜோஜிகோட் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது.

திடீரென அந்த பஸ், முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு பால் டேங்கர் லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ்சும், பால் டேங்கர் லாரியும் சாலையில் கவிழ்ந்தன. பஸ்சில் இருந்த பயணிகள், இருக்கைகளிலும், கண்ணாடிகளிலும் முட்டி மோதிக்கொண்டனர்.

இந்த கோர விபத்தில் 18 பேர் பலியானார்கள். அவர்களில் 3 பெண்களும், ஒரு குழந்தையும் அடங்குவர். பஸ் டிரைவரும், லாரி டிரைவரும் பலியானவர்களில் அடங்குவர். மேலும், 19 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தலையில் காயம் அடைந்த முகமது ஷமின் என்ற பயணி, அனைவரும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்ததால் என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்று கூறினார். பலியானவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

மாடி பஸ் வேகமாக வந்து மோதியது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்திருப்பதாக மாவட்ட கலெக்டர் கவுரங் ரதி தெரிவித்தார். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். உடனடியாக மீட்புப்பணி தொடங்கியது. மாவட்ட நிர்வாகம் உதவி மைய எண்களை அறிவித்தது.

காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறினார். பலியானோரின் ஆன்மாக்கள் தனது காலடியில் இளைப்பாற அனுமதிக்குமாறு கடவுள் ராமரை வேண்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்த விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் பலர் பலியான செய்தி மிகவும் துயரமானது. திடீர் மரணத்தை சந்தித்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது: உன்னாவில் நடந்த சாலை விபத்து மிகவும் வேதனையானது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த கடினமான நேரத்தில் இறைவன் அவர்களுக்கு வலிமையை அளிக்கட்டும். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பலியானோர் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory