» சினிமா » செய்திகள்
விஜய் சேதுபதியை யாரும் தாக்கவில்லை: பெங்களூரு காவல்துறை விளக்கம்
வெள்ளி 5, நவம்பர் 2021 4:13:15 PM (IST)
விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை என்று பெங்களூரு காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
பெங்களூரு விமானநிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி சில நண்பர்களுடன் காவல்துறை பாதுகாப்போடு வெளியேற முயன்ற போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவரை பின்னால் இருந்து தாக்குவது போன்ற காணொலி வெளியாகி இருந்தது. அந்த நபர், யாரை தாக்க முயன்றார் என்று தெரியாத நிலையில், உடனடியாக அருகில் இருந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப்படையினர் தாக்குதல் நடத்தியவரை பிடித்தனர்.
என்ன காரணத்திற்காக அந்த நபர் தாக்குதல் நடத்தினார் என்ற விவரம் இதுவரை வெளியாகாத நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர். அதில்,"விஜய் சேதுபதியுடன் விமானத்தில் வந்த நண்பர் ஒருவருக்கும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபருக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. அவரை தாக்கவே இவர் அங்கு வந்துள்ளார். விஜய் சேதுபதிக்கும் தாக்குதலில் ஈடுபட்டவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. விஜய் சேதுபதியை அவர் தாக்கவில்லை. விஜய் சேதுபதியின் நண்பர் தரப்பும், தாக்குதல் நடத்தியவரும் சமாதானம் செய்துகொண்டதால் காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யவில்லை" என்றனர்.