» சினிமா » செய்திகள்
நாய் சேகர்' தலைப்பு சர்ச்சை : சிவகார்த்திகேயன் கருத்து
செவ்வாய் 21, செப்டம்பர் 2021 11:23:23 AM (IST)
சதீஷ் நடிக்கும் நாய் சேகர் தலைப்பு சர்ச்சை தொடர்பாக சிவகார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார்.
கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ் நாயகனாக நடித்துள்ள படம் 'நாய் சேகர்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சமீபத்தில் வெளியிட்டார் சிவகார்த்திகேயன். மேலும், மீண்டும் வடிவேலு நாயகனாக நடிக்கும் படத்துக்கு இந்தத் தலைப்பைக் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், ஏஜிஎஸ் நிறுவனம் தலைப்பைக் கொடுக்க மறுத்துவிட்டது.
இதனிடையே, கோயம்புத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். 'நாய் சேகர்' தலைப்பு சர்ச்சை குறித்துக் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், "வடிவேலு சார் மீண்டும் வருவது சூப்பர். 'நாய் சேகர்' தலைப்பு தொடர்பாக சதீஷிடம் பேசினோம். 'ப்ரோ.. படப்பிடிப்பே முடிந்து படமே தயாராக உள்ளது. 'நாய் சேகர்' தலைப்பைப் படம் முழுக்கவே பயன்படுத்தியுள்ளோம்.
இது தொடர்பாக வடிவேலு சாரிடமும் பேசினோம்' என்று சொன்னார். வடிவேலு சார் வேறொரு தலைப்பில் நடிப்பார். சதீஷ் புதிதாக நாயகனாக நடிப்பதால் இந்த மாதிரி ஒரு பெரிய தலைப்பு தேவைப்படுகிறது. வடிவேலு சாருக்கு இந்தத் தலைப்பு எல்லாம் தேவைப்படாது. அவருடைய படத்துக்கு எந்தத் தலைப்பு வைத்தாலும் பயங்கரமாகத்தான் இருக்கும்" என்றார்.