» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: கே.எல்.ராகுல், சுப்மன் கில் அதிரடி சதம்!

சனி 6, ஜூன் 2026 5:26:51 PM (IST)



இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழ்நது 368 ரன்கள் குவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக நியூ சண்டீகரில் இன்று (ஜூன் 6) தொடங்கியுள்ள ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி தனது அசாத்திய பேட்டிங் திறமையால் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 368 ரன்கள் குவித்து வலுவான நிலையை எட்டியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அபார சதம் விளாசி அசத்தியுள்ளனர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 24 ரன்கள் (5 பவுண்டரிகள்) எடுத்திருந்த நிலையில், சாஃபி பந்துவீச்சில் ஜாஸாயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியாவின் முதல் விக்கெட் 41 ரன்களுக்கு வீழ்ந்தது.

அதன் பின், கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் நிதானமாகவும் நேர்த்தியாகவும் விளையாடி ரன்களை உயர்த்தினார். இந்த ஜோடி ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. சாய் சுதர்சன் 104 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்துச் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டு, சாஃபி பந்துவீச்சில் மீண்டும் ஜாஸாயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு முக்கியப் பங்காற்றியது.

மறுபுறம் நங்கூரமாய் நிலைத்து நின்று விளையாடிய தொடக்க வீரர் கே.எல்.ராகுல், டெஸ்ட் போட்டிகளுக்குரிய நேர்த்தியுடன் விளையாடித் தனது சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 165 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் சரியாக 100 ரன்கள் எடுத்திருந்த போது, ஷெரீஃபி பந்துவீச்சில் குர்பாஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 247 ரன்களாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த சுப்மன் கில் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜோடி, ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சைத் தங்களது அதிரடி பாணியில் எதிர்கொண்டது. சண்டீகர் மைதானத்தின் சூழலைச் சாதகமாக்கிக் கொண்ட சுப்மன் கில், நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 143 பந்துகளில் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் தனது சிறப்பான சதத்தைப் பதிவு செய்தார்.

அவருக்கு இணையான அதிரடியைத் தொடர்ந்த ரிஷப் பந்த், வெறும் 70 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 பிரம்மாண்ட சிக்ஸர்களுடன் தனது அரைசதத்தை (50 ரன்கள்) எட்டினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்த ஜோடி பிரிக்கப்படாமல் 148 பந்துகளில் 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் (Partnership) அமைத்து களத்தில் உள்ளது.

இன்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்துள்ளது. தற்போதைய ரன் விகிதம் ஓவருக்கு 4.33 ஆக உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் முகமது சலீம் சாஃபி 2 விக்கெட்டுகளையும், ஜியாவுர் ரஹ்மான் ஷெரீஃபி 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். சுப்மன் கில் 103 ரன்களுடனும், ரிஷப் பந்த் 50 ரன்களுடனும் களத்தில் உள்ளதால், நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா மேலும் ஒரு பெரிய இலக்கை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory