» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
உலக கோப்பை அணியில் பும்ரா இன்னும் வெளியேறவில்லை: கங்குலி விளக்கம்
சனி 1, அக்டோபர் 2022 12:22:44 PM (IST)
டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா இன்னும் வெளியேறவில்லை என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அவர் போட்டித் தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அதேநேரம் காயம் அடைந்ததை உறுதிப்படுத்தியுள்ள பிசிசிஐ, உலகக்கோப்பையில் அவருக்கு மாற்று வீரர் யார் என்பது குறித்தும் அறிவிக்கவில்லை.இப்போதைக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் முகமது சிராஜை பும்ராவுக்கு மாற்று வீரராக அறிவித்துள்ளது.
முதுகு வலியின் தீவிரத் தன்மையை அறிந்து கொள்ள பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ளார் பும்ரா. முதுகு வலி பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை தேவை இல்லை என்ற போதிலும் அதில் இருந்து குணமடைய நீண்ட காலம் ஆகும் எனக் கூறப்பட்டுவருகிறது.
எனினும், பும்ரா விவகாரத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி. ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பும்ரா இன்னும் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறவில்லை. ஏதாவது நடக்கும் என்று உறுதியாக நம்புகிறோம். மிக விரைவில் அவர் மீண்டும் ஆரோக்கியமாக வருவார். அதனால், அவரை இன்னும் வெளியேற்றவில்லை. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் இது தெரியவரும்" என்று தகவல் தெரிவித்துளளார்.