» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு கரோனா
செவ்வாய் 23, ஆகஸ்ட் 2022 12:32:17 PM (IST)
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான ராகுல் டிராவிடுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு ஜிம்பாப்வே தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது. முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் பயிற்சியாளராக செயல்பட்டார். இந்த வாரம் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியினருடன் இணைந்து துபை செல்லவிருந்தார் டிராவிட். இந்நிலையில் கரோனாவால் டிராவிட் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஆசியக் கோப்பைப் போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு டிராவிட் உடனடியாக செல்வது சந்தேகம் எனத் தெரிகிறது. இதையடுத்து ஆசியக் கோப்பைப் போட்டியிலும் விவிஎஸ் லக்ஷ்மணே இந்திய அணியின் பயிற்சியாளராகத் தொடர்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும் எனத் தெரிகிறது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை 7 முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன