» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் நிறைமாத கர்ப்பினி!!
புதன் 27, ஜூலை 2022 12:43:38 PM (IST)
செஸ் ஒலிம்பியாட் தொடரில் களமிறங்கவுள்ள நிறைமாத கர்ப்பிணியான இந்திய வீராங்கனை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
188 நாடுகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்த தொடருக்காக இந்தியாவின் சார்பில் மொத்தம் 6 அணிகள் களமிறக்கப்படுகின்றன. ஓபன் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள் ஏ அணியில் இடம்பெற்றுள்ளவர் தான் கிராண்ட் மாஸ்டர் ஹரிகா துரோனவள்ளி. 9 வயதிலேயே தேசிய சாம்பியன் பட்டம் வென்ற இவர், 8 மாத கர்ப்பிணியாக களமிறங்குகிறார்.
2011ம் அண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற ஹரிகா, இதுவரை 2012, 2015, 2017 என மூன்று முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். செஸ் உலகில் வெற்றி நடை போடும் இவரை பாராட்டி மத்திய அரசு அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவித்தது.
இப்படிபட்ட பெருமை கொண்ட ஹரிகா, இந்த முறை எப்படியாவது தங்கம் வென்றே தீர வேண்டும் என்ற முணைப்புடன் களமிறங்குகிறார். இது அவர் சந்திக்கப்போகும் 9வது செஸ் ஒலிம்பியாட் தொடராகும். 13 வயதில் இருந்து செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வெல்ல போராடி வருவதால், இந்த முறை சொந்த நாட்டில் வென்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹரிகாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு போட்டி அரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம், மருத்துவக்குழு என தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அவர், மனரீதியாக எந்தவித மாற்றமும் இன்றி சகஜமாக இருக்கிறேன். உடல் ரீதியாக சிக்கல்கள் வரலாம். எனினும் அதனை மீறி வெல்வேன் என நம்பிக்கையுள்ளதாக கூறியிருக்கிறார்.