» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தினேஷ் கார்த்திக்கை அணியில் தேர்வு செய்தது ஏன்? ராகுல் திராவிட் விளக்கம்
செவ்வாய் 21, ஜூன் 2022 10:23:22 AM (IST)
"தினேஷ் கார்த்திக்கை அணியில் தேர்வு செய்தது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் விளக்கம் அளித்துள்ளார்.
37 வயதான தினேஷ் கார்த்திக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்துள்ளார். 15-வது ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அவர் வெளிப்படுத்திய அபார ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டார்.தென்னாப்பிரிக்க தொடரில் விளையாடி முடித்துள்ள நிலையில் அயர்லாந்து தொடரில் விளையாட ஆயத்தமாகி வருகிறார் அவர். இந்நிலையில், தினேஷ் கார்த்திக்கை இந்திய அணியில் விளையாட தேர்வு செய்ததற்கான காரணம் என்ன என்பதை தெரிவித்துள்ளார் ராகுல் திராவிட்.
"அவரை அணியில் தேர்வு செய்ய காரணமே அவரிடம் உள்ள அந்த தனித்திறன்தான். அவரது அந்த திறன் ராஜகோட் போட்டியில் எங்களுக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. கடைசி ஐந்து ஓவர்களில் பெரிய அளவிலான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். அவரும், ஹர்திக் பாண்டியாவும் அந்த ஆட்டத்தை முடித்துக் கொடுத்த விதம் அற்புதம். டெத் ஓவர்களில் அவர்களை எங்கள் அணியின் செயல்வீரர்கள் என சொல்வேன்.
இப்போதைக்கு கடைசி ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் அவர்கள் இருவரும் இருக்கிறார்கள் என கருதுகிறேன். அணியில் அவர் எந்த ரோலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளாரோ அதை கார்த்திக் சரியாக செய்து வருகிறார். அது வரும் நாட்களில் கூடுதல் ஆப்ஷனுடன் ஆட்டத்தை நாங்கள் அணுக உதவும் என நம்புகிறேன். அது மாதிரியான இன்னிங்ஸ் எல்லாம் ஒன்றே ஒன்றை தான் சொல்லும். வாய்ப்புக்காக கதவை தட்டக் கூடாது, கதவை தகர்க்க வேண்டும் என நான் எப்போதும் சொல்வேன். அதை அந்த இன்னிங்ஸ் மூலம் கார்த்திக் செய்துள்ளார்" என திராவிட் தெரிவித்துள்ளார்.
ராஜ்கோட் மைதானத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 27 பந்துகளில் 55 ரன்களை குவித்து அசத்தியிருந்தார் தினேஷ் கார்த்திக். அந்த இன்னிங்ஸை குறிப்பிட்டு தான் டதிராவிட் பேசியுள்ளார். திராவிடின் இந்த கருத்து எதிர்வரும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம் பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.