» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி ஆடவர் அணிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!
வியாழன் 5, ஆகஸ்ட் 2021 10:43:20 AM (IST)
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜெர்மனி அணியுடன் மோதிய்இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது.
32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் ஆக்கி அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. ஆட்டத்தின் இறுதிவரை பரபரப்பாக சென்ற போட்டியில் ஜெர்மனியை தோற்கடித்து பதக்கம் வென்றது இந்தியா.
41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறது இந்திய ஆடவர் ஆக்கி அணி. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதித்த இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்திய ஆக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வரலாற்று! ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் நாள். வெண்கலத்தை வீட்டிற்கு கொண்டு வந்த எங்கள் ஆண்கள் ஆக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனையின் மூலம், ஒட்டுமொத்த நாட்டின் குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை அவர்கள் நிறைவேற்றி உள்ளனர். எங்கள் ஆக்கி அணியை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது என கூறியுள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த இந்திய ஆக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இந்திய ஆடவர் ஆக்கி அணி பெற்ற வெற்றி ஆக்கியில் புதிய சகாப்தத்தை உருவாக்கி உள்ளது. விளையாட்டில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய அணியின் வெற்றி உந்து சக்தியாக இருக்கும் என்றார்.