» செய்திகள் » தமிழகம்

குடியரசு தினவிழா சாகசத்தின்போது இறந்த போலீஸ்காரர் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

வெள்ளி 27, ஜனவரி 2012 4:53:46 PM (IST)

ஊட்டியில் நடந்த சாகச நிகழ்ச்சியின் போது உயிரிழந்த போலீஸ்காரர் பாண்டியனின் உடல் சொந்த ஊரான சின்னமனூரில் உள்ள மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம், சின்னமனூர் கருங்கட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (31). நீலகிரி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த இவர், நேற்று ஊட்டியில் நடந்த குடியரசு தினவிழா சாகச நிகழ்ச்சியின் போது, தவறி விழுந்ததில் கழுத்து எலும்பு முறிந்து பரிதாபமாக இறந்தார்.

பாண்டியனின் உடல் நேற்றிரவு சின்னமனூருக்கு கொண்டு வரப்பட்டது. உடலைப் பார்த்து மனைவி, தாயார் மற்றும் உறவினர்கள், போலீ சார் கதறி அழுதது பார்ப்பவர்களை மிகவும் கண்கலங்க வைத்தது. பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் சின்னமனூர் மயானத்தில் பாண்டியனின் உடல் போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதில் சத்தியமங்கலம் அதிரடிப்படை டிஎஸ்பி குலாம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சின்னமனூர் கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வரை படித்த பாண்டியன் சிறுவயதில் இருந்தே விளையாட்டு மற்றும் சாகச நிகழ்ச்சிகளில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருந்தார். அப்போதே வால்ட் ஜம்ப் எனும் சாகசத்தை செய்து காட்டுவதில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார். கடந்த 2003ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார். 

ஓராண்டு பயிற்சிக்குப் பின் சத்தியமங்கலம் அதிரடிப்படை பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். வீரப்பன் வேட்டைக்குப் பின்னரும் சத்தியமங்கலத்தில் முகாமிட்டிருந்த அதிரடிப்படையிலேயே பணிபுரிந்த பாண்டியன் கடந்த மே மாதம் நீலகிரி ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory