» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிவகாசியில் மின்சாதன கடையில் தீ: ரூ.3 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்!
வியாழன் 2, பிப்ரவரி 2023 3:32:49 PM (IST)
சிவகாசியில் மின்சாதன பொருள்கள் விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான எலக்ட்ரிக் பொருள்கள் எரிந்து நாசமானது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள காந்தி சாலையில் ரவி அருணாசலம் என்பவருக்கு சொந்தமான மின்சாதன பொருள்கள் விற்பனை கடை உள்ளது. இந்த கடை மூன்று தளங்கள் கொண்டதாகும். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றனர். தொடர்ந்து இன்று அதிகாலை சுமார் 1:30 மணி அளவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர், சாத்தூர் ஆகிய பகுதிகளின் தீயணைப்பு படையினர் 8 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.அதிக அறைகள் கொண்ட கட்டடம் என்பதால் தீயை அணைக்கும் பணி தாமதமானது. இந்தத் தீ விபத்தில் கடையிலிருந்த சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான மின்சாதன பொருள்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்த சிவகாசி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நல்லாFeb 2, 2023 - 06:12:26 PM | Posted IP 162.1*****