» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக முதல்வர் ஸ்டாலின் தென்காசி வருகை: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!
வியாழன் 8, டிசம்பர் 2022 10:20:02 AM (IST)
தென்காசி மாவட்டம் உதயமான பிறகு முதன்முறையாக வருகை தந்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னையிலிருந்து அரசு முறை பயணமாக நேற்று இரவு பொதிகை விரைவு ரயில் மூலம் தென்காசிக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று காலையில் வருகை தந்தார். அவருக்கு ரயில் நிலையத்தில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னா், அங்கிருந்து காா் மூலம் குற்றாலம் சுற்றுலா விருந்தினா் மாளிகைக்கு செல்லும் முதல்வா், அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு இலத்தூா் வேல்ஸ் சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறாா்.
அப்போது, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிறைவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிவைக்கிறாா். மேலும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 349 பயனாளிகளுக்கு ரூ.149 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். அதைத் தொடா்ந்து, காா் மூலம் ராஜபாளையம் செல்கிறாா்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், திமுக மாவட்டச் செயலா்கள் பொ.சிவபத்மநாதன் (தெற்கு), ஈ.ராஜா எம்எல்ஏ (வடக்கு) ஆகியோா் செய்து வருகின்றனா். முதல்வரின் வருகையை முன்னிட்டு 10 மாவட்டங்களைச் சோ்ந்த 3,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.