» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தங்களால் இயன்ற வரையில் கொடிநாள் நிதி வழங்கிட வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்!
புதன் 7, டிசம்பர் 2022 4:25:38 PM (IST)
நெல்லை மாவட்டத்தில் கொடி நாள் வசூலை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு துவக்கி வைத்து ரூ.1.19 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், கொடி நாளை முன்னிட்டு கொடி நாள் வசூலை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு இன்று (07.12.2022) துவக்கி வைத்து 8 முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1.19 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசுகையில், நமது நாட்டின் முப்படையையும் சார்ந்த இராணுவ வீரர்களின் தன்னலற்ற சேவையை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் நாள் படைவீரர் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது.
இக்கொடிநாள் அன்று பொதுமக்களிடம் வசூல் செய்யப்படும் நிதியானது போரில் ஊனமுற்றவர்கள் / உயிர்நீத்த படைவீரர்களின் கைம்பெண்கள் முன்னாள் இராணுவத்தினர் நலுனக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொடிநாள் வசூலில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.77.60 இலட்சம் கொடிநாள் நன்கொடை வசூல் பெறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 4000 முன்னாள் படைவீரர்களின் மற்றும் விதவையர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 2022ஆம் ஆண்டில் மட்டும் 512 பயனாளிகளுக்கு ரூ.1.13 கோடிக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்கள் அவர்களை சார்தோர்களுக்கு அனைத்து நலத்திட்டங்களும் கொடிநாள் நிதியிலிருந்து வழங்கப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் இராணுவ வீரர்களின் சேவையை கருத்திற்கொண்டு தங்களால் இயன்ற வரையில் கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்கிடுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு கேட்டுக் கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, உதவி ஆட்சியர் (பயிற்சி) கோகுல் உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) சி.இராமகிருஷ்ணன், மாவட்ட முன்னாள் முப்படை வீரர்களின் உபதலைவர் கர்ணல் (ஓய்வு) செல்லையா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.