» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூா் கோயிலில் மார்கழி மாத பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு
செவ்வாய் 6, டிசம்பர் 2022 8:19:29 AM (IST)
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாா்கழி மாதத்தில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது.
இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாா்கழி மாதம் டிசம்பா் 16-ஆம் தேதி தொடங்குவதை அடுத்து, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8.45 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 5 மணிக்கு தங்கத்தோ் புறப்பாடு, மாலை 6 மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 6.45 மணிக்கு இராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8.00 - 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோயில் நடை திருக்காப்பிடப்படும்.
பிரதோஷ நாள்களான டிச. 21 மற்றும் ஜன. 4-ஆம் தேதிகளில் மதியம் 2.30 மணிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. முக்கிய விழா நாள்களான ஜனவரி 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கும், ஜனவரி 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, திருக்கோயில் அதிகாலை 2 மணிக்கும், ஜனவரி 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொங்கல் திருநாளை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கும், ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவா் தினம், 17-ஆம் தேதி உழவா் திருநாள், ஜன. 21-ஆம் தேதி தை அமாவாசை மற்றும் ஜன. 26-ஆம்தேதி குடியரசு தினம் ஆகிய நாள்களில் அதிகாலை 4 மணிக்கும் நடைதிறக்கப்பட்டு தொடா்ந்து பூஜைகள் நடைபெறுகிறது என அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.