» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: தூத்துக்குடியில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி!

திங்கள் 5, டிசம்பர் 2022 5:24:35 PM (IST)



தமிழகத்தில் மின்கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் மட்டுமல்லாமல் சிறு, குறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது என சிபிஎம்  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அண்ணாநகரில் 150 கி.மீ நடைப்பயண‌ம் நிறைவு பெற்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநகர் செயலாளர் தா.ராஜா வரவேற்புரையாற்றினார். மாநில செயற்க்குழு உறுப்பினர் நூர்முகம்மது, மாநிலக்குழு உறுப்பினர் பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.அர்ச்சுணன், ஆர்.ரசல் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். 

கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சிறப்புரையாற்றினார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் "தமிழகத்தில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள மின்கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் மட்டுமல்லாமல் சிறு, குறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், மின்கட்டண அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்லி தமிழக அரசு பொதுமக்களை வற்புறுத்துவதன் காரணமாக பொதுமக்கள் அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர், எனவே இதை கைவிட வேண்டும். 

மேலும் மத்திய ஆளும் பாஜக அரசு பாஜக ஆளாத மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது, அவ்வாறு செய்ய முடியாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர் மூலம் போட்டி அரசை நடத்தி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை அப்படி ஏற்றுக் கொள்ளாத போதும் தமிழகத்தில் ஆளுநர் தொடர்ச்சியாக பல்கலைக்கழகங்களுடைய துணைவேந்தர்கள் கூட்டத்தை நடத்தி மத்திய அரசு ஏற்கனவே கொண்டுவந்த கல்விக் கொள்கை அமல் படுத்த முயற்சிக்கிறார்.

தமிழகத்தில் ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இவ்வாறு காலம் தாழ்தியதன் காரணமாக ஆன்லைன் ரம்மி தடை மசோதா காலாவதி ஆகி உள்ளது, இதன் காரணமாக சில நாட்களிலேயே ஆன்லைன் ரம்மி தற்கொலைகள் அதிகரித்து உள்ளது. எனவே இந்த ஆன்லைன் ரம்மி மசோதா தடைச் சட்டத்திற்கு ஆளுநர் கையெழுத்திட வேண்டும், மேலும் மாநில அரசின் உரிமைகளை பறிக்கக் கூடிய விதமாக ஆளுநர் செயல்படுகிறார் என கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.புவிராஜ் நன்றியுரையாற்றினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், பேச்சிமுத்து, அப்பாதுரை, சன்முகராஜ், சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory