» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரக்கை: டிச.8ல் அதிகனமழை வாய்ப்பு!
திங்கள் 5, டிசம்பர் 2022 4:21:45 PM (IST)
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வரும் 8-ம் தேதி அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 6ஆம் தேதி மாலை தென்கிழக்கு வாங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.
பிறகு இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் 8ஆம் தேதி காலை வட தமிழகம் - புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் அருகில் வந்தடையக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், டிசம்பர் 8ஆம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.