» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜெயலலிதா நினைவு தினம்: எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா மரியாதை!
திங்கள் 5, டிசம்பர் 2022 10:46:59 AM (IST)
சென்னை மெரினாவில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் நினைவு உறுதிமொழி ஏற்றனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி வாசிக்கும்போது, அதில் தி.மு.க.வை தாக்கியும், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என்றும், துரோகிகளை தூள்தூளாக்குவோம் என்பன போன்ற வரிகளை குறிப்பிட்டார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் , கேபி முனுசாமி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் அதிமுக தலைவர்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர்.
ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் "ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்றும், ஜெயலலிதாவை மீண்டும் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஆக்குவோம் என்றும் உறுதிமொழி ஏற்றனர்.
சசிகலா தலைமையில் நிர்வாகிகள் ஏற்ற உறுதிமொழியில், தமிழக மக்களின் நலன் மற்றும் கட்சி வளர்ச்சிக்காகவும், உயிர் தொண்டர்களின் உயர்வுக்காகவும் ஒன்றிணைவோம் என்று உறுதிமொழி ஏற்றனர். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள் மு.தம்பிதுரை, சி.வி.சண்முகம் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.