» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் ஆளுநர் பதவியே காலாவதியான பதவிதான் : கனிமொழி எம்பி பேட்டி
திங்கள் 28, நவம்பர் 2022 4:05:10 PM (IST)
தமிழகத்தில் ஆளுநர் பதவியே காலாவதியான பதவிதான். ஆன்லைன் ரம்மியைப் பாதுகாக்க ஏன் இவ்வளவு துடிக்கிறார்கள் என்று தெரியவில்லை" என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு கடந்த செப்டம்பர் 26-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு அக்டோபர் 1 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
தொடர்ந்து கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி நடந்த பேரவையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்டு ஆளுநர் கோரியிருந்த நிலையில் தமிழக அரசு அதுகுறித்து விளக்கம் அளித்தது. எனினும் இந்த மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காததால் காலாவதியாகிவிட்டது.
இதுகுறித்து தமிழக அமைச்சர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களுடன் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யான கனிமொழி, 'ஆளுநர் பதவியே தேவையில்லாத ஒன்றுதான். அது காலாவதியான பதவிதான். ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் அந்த மசோதா காலாவதியாகும் நிலையேற்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மியைப் பாதுகாக்க ஏன் இவ்வளவு துடிக்கிறார்கள் என்று தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.