» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா : லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
புதன் 5, அக்டோபர் 2022 5:15:03 PM (IST)
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்று வந்த நவராத்திரி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நவராத்திரி விழா கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று உலக நன்மை வேண்டியும், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய ஆன்மீக குரு பங்காரு அடிகளார் அகண்ட தீபத்தை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளை ஒட்டி ஆதிபராசக்தி சித்தர் பீடம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வாழை தோரணங்களாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
விழா தொடங்கிய நாளிலிருந்து ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு குங்குமம், வேப்பிலை, விபூதி, சந்தன, மஞ்சள், துளசி, சிறுதானியம், கற்கண்டு, உலர் பழங்கள், நவதானியம் ஆகிய பொருட்களைக் கொண்டு 11 நாட்கள் தொடர்ந்து ஆதிபராசக்தி அம்மனுக்கு காப்புகள் அணிவித்து, ஆதிபராசக்தி கங்கை அம்மன், பேச்சியம்மன், சாரதாம்பாள், மகாலட்சுமி, ஸ்ரீ மானசாதேவி, மோட்சபிரபாதேவி, சரஸ்வதி, காளி ஆகிய தெய்வ உருவங்களில் அலங்காரங்கள் செய்யப்பட்டு தினந்தோறும் லட்சார்ச்சனை செய்யப்பட்டது.
தங்கத் தேர் பவனியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி நிறைவு நிகழ்ச்சி நேற்று காலை மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ச்சியாக ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து நவதானியத்தால் காப்பு அணிவிக்கப்பட்டு காளி வேடத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் சித்தர் பீடத்தை வளம் வந்து அம்மனுக்கு தீபாராதனை செய்தார். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கருவறையில் வைக்கப்பட்டிருந்த அகண்ட தீபத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றி வழிபட்டனர்.
சித்தர் பீட வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கொலுவினை பக்தர்கள் கண்டுகளித்தனர். விழா ஏற்பாட்டினை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் இலட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தலைமையில் அனைத்து மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தினர் பொறுப்பேற்று செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் உமாதேவி ஜெய் கணேஷ், ஆஷா அன்பழகன், ஸ்ரீலேகா செந்தில்குமார், வழக்கறிஞர் அகத்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருட்பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.