» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.80ஆயிரம் பறிப்பு : இளஞ்சிறார் உட்பட 4பேர் கைது!
புதன் 29, ஜூன் 2022 9:48:41 PM (IST)
தூத்துக்குடி டாஸ்மாக் கடையில் விற்பனையாளரை தாக்கி ரூ.80ஆயிரம் பறித்த வழக்கில் இளஞ்சிறார் உட்பட 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி பொன்னகரத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் தூத்துக்குடியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலையில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சில வாலிபர்கள் மதுபோதையில் வந்து உள்ளனர். மேலும் விற்பனையாளர் சங்கரிடம் பணம் கொடுக்காமல் மதுபாட்டில்கள் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் தரமறுத்ததால் அவரிடம் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டார்களாம்.
இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் பீர்பாட்டிலை உடைத்து விற்பனையாளர் சங்கரை தாக்கி உள்ளனர். மேலும் அவர்கள், டாஸ்மாக் கடையில் இருந்த விற்பனை பணம் ரூ.80 ஆயிரத்தை திருடி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சங்கர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மூக்கன், சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து தூத்துக்குடி லெவஞ்சிபுரத்தைச் சேர்ந்த முத்துராஜ் மகன் மூர்த்தி (21), லெனின் மகன் சரவணன் (22), லோகியா நகரை சேர்ந்த முருகன் மகன் பிரபாகரன் (28) மற்றும் 17 வயது இளஞ்சிறார் என 4 பேரை கைது செய்துள்ளனர்.