» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் 7ல் தேர்தல்..!
வியாழன் 2, டிசம்பர் 2021 11:47:14 AM (IST)
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் 7ல் வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான சூழலில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வில் ‘ஒற்றை தலைமை’ என்ற பேச்சுக்கே இடமில்லை. இனி ‘இரட்டை தலைமை’தான் அ.தி.மு.க.வை தொடர்ந்து வழிநடத்தும் என்பதை உறுதி செய்யும் வகையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில், கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும், 8 ஆம் தேதியன்று தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமைச் செயலகம் வெளியிட்ட அறிவிப்பில், அதிமுகவின் சட்டதிட்ட விதி-30 பிரிவு 2-ன்படி கட்சி அமைப்புகளின் பொதுத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும் என்ற விதிமுறைக்கேற்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 7ஆம் தேதியும் வாக்கெண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. வேட்பு மனுதாக்கல் டிசம்பர் 3 முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறும். வேட்புமனு பரிசீலனை டிசம்பர் 5ஆம் தேதியும், வேட்புமனு திரும்பப் பெறுதல் டிசம்பர் 6ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
தேர்தல் ஆணையர்களாக கட்சியின் மூத்த தலைவர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் செயல்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிளை நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு நிர்வாகிகள், நகர வார்டு நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்ட நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் டிசம்பர் 13 முதல் 23 வரை இரண்டு கட்டங்களாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.