» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம் : இபிஎஸ் - ஓபிஎஸ் அதிரடி நடவடிக்கை

புதன் 1, டிசம்பர் 2021 10:10:52 AM (IST)

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளது கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.பி.யும், அக்கட்சி சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளருமான அ.அன்வர் ராஜா சமீபத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து சில கருத்துகளை வெளியிட்டார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை அவர் ஒருமையில் பேசும் ஆடியோ பதிவு பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது.

இது கடந்த 24-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் எதிரொலித்தது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும், அன்வர் ராஜாவுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இது அ.தி.மு.க. கட்சியினர் இடையே பெரும் விவாத பொருளாக மாறியது. அன்வர் ராஜா மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில் அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கி அக்கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: அ.தி.மு.க.வின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து கட்சியின் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளருமான அ.அன்வர்ராஜா இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கட்சியினர் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இந்த சூழ்நிலையில் அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

MAKKALDec 1, 2021 - 02:01:28 PM | Posted IP 162.1*****

Very Good sir, Excellant decision by AIADMK EPS. இது போல இன்னும் useless சிலரை நீக்கினால் கண்டிப்பாக AIADMK விரைவில் ஆட்சி அமைக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory