» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சேலத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து விபத்து : தீயணைப்பு அதிகாரி, மனைவி உட்பட 5பேர் பலி
செவ்வாய் 23, நவம்பர் 2021 4:56:43 PM (IST)
சேலத்தில் சமையல் சிலிண்டர் வெடித்த விபத்தில் தீயணைப்பு அதிகாரி, அவரது மனைவி உட்பட 5பேர் உயிரிழந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன். செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத்துறை சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பத்மநாபன் வீட்டில் இன்று காலை சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அவரது வீடு மற்றும் சுற்றியுள்ள 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதில், கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்து தீயணைப்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி தீயணைப்பு அதிகாரி பத்மநாபன், அவரது மனைவி தேவி, மற்றும் கார்த்திக் ராம்(18), எல்லம்மாள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே ராஜலட்சுமி என்பவர் உயிரிழந்த நிலையில், மேலும் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதன் மூலம் இந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.