» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எனது கடைசி டி20 ஆட்டம் சென்னையில்தான் நடைபெறும் : எம்எஸ் தோனி நம்பிக்கை
ஞாயிறு 21, நவம்பர் 2021 11:48:31 AM (IST)
எனது கடைசி டி20 ஆட்டம் சென்னையில்தான் நடைபெறும் என நம்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தெரிவித்தார்.
14-வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்றது. இதற்கான பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கேப்டன் மகேந்திர சிங் தோனி, பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
அங்கு தோனி பேசியது: "சென்னையுடனான இணைப்பைப் பொறுத்தவரை, 2008-இல் ஐபிஎல் தொடங்கியபோது தொடங்கியது. ஆனால், அதற்கு முன்பே மற்ற வகை கிரிக்கெட்டில் அந்த இணைப்பு தொடங்கிவிட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் அறிமுகமான ஆட்டம் சென்னையில் நடைபெற்றது. அது மறக்க முடியாத நினைவு.
நான் சிஎஸ்கேவால் தேர்வு செய்யப்படுவேன் என்று தெரியாது. நான் புறப்பட்ட இடத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கலாசாரத்தைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை இது வழங்கியது. நான் தொடர் பயணத்திலேயே இருப்பவர்களைப் போன்றவன். என்னுடைய பெற்றோர்கள் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். பின்னர் அது உத்தரகண்டாக மாறியது. நான் ராஞ்சியில் பிறந்தேன். அது பிகார். பின்னர் ஜார்க்கண்டாக மாறியது. 18 வயதில் ரயில்வே துறையில் மேற்கு வங்கத்தில் பணிபுரிந்தேன். பின்னர் சென்னை வந்தேன்.
சென்னையும், தமிழ்நாடும் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. சேப்பாக்கத்தில் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் ரசிகர்கள் நல்ல கிரிக்கெட்டை ஆதரித்தார்கள். எதிரணி நன்றாக விளையாடக் கூடாது என்கிற மனநிலை சேப்பாக்கத்துக்குப் பொருந்தாது. நாங்கள் சிறப்பாக செயல்படாதபோது, நாங்கள் களத்தில் இல்லாதபோது ரசிகர்கள் எங்களை ஆதரித்தார்கள். எனது கடைசி டி20 ஆட்டம் சென்னையில் நடைபெறும் என நம்புகிறேன்" என்றார்.