» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி அரசு மருத்துவரை கடத்தி கொலைவெறி தாக்குதல்: பஞ்சாயத்து தலைவர் கைது!
சனி 20, நவம்பர் 2021 7:34:56 PM (IST)
தூத்துக்குடியில் அரசு மருத்துவமனை மருத்துவரை கடத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் மகன் முருகப்பெருமாள் (25). பல் மருத்துவரான இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 18ம் தேதி மருத்துவமனை வளாகத்தில் இருந்து வந்த இவரை வழிமறித்து வெள்ளை நிற காரில் மர்ம கும்பல் கடத்திச் சென்றுள்ளது. பின்னர், ஓட்டப்பிடாரம் அருகில் தோட்டத்தில் அடைத்து வைத்து கொடுவாள், அரிவாள், இரும்பு பைப், போன்ற ஆயுதங்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்
மேலும் அவரிடம் இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் மணி பர்சை அபகரித்துக் கொண்டு பின்பு மீண்டும் அவரை காரில் ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் கொண்டு விட்டுவிட்டு ஒரு மணி நேரத்தில் நீ தூத்துக்குடியை விட்டு ஓடிவிட வேண்டும் இங்கு நடந்ததை யாரிடமாவது கூறினால் உன்னையும் உன் குடும்பத்தையும் பூண்டோடு அழித்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு அதே காரில் சென்றுவிட்டனர். இதில் காயம் அடைந்த டாக்டர் முருகப்பெருமாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவரும், ஓட்டப்பிடாரம் ஒன்றிய திமுக செயலாளருமான இளையராஜா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். தாக்கப்பட்ட டாக்டர் மருத்துவமனையில் தண்ணுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் டாக்டரை காதலித்து வந்ததாகவும், இதனை அந்த பெண்ணின் தகப்பனார் கண்டித்துள்ளார். இதையடுத்து அவர் தனது நண்பரான ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜாவிடம் கூறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.