» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

வெள்ளி 23, ஜூலை 2021 5:19:51 PM (IST)



பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடி ஆகும். தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரிக்க தொடங்கியது.

இன்று அதிகாலை 3 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் அணையின் நீர்மட்ட உயரம் 97 அடியாக உயர்ந்தது. அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 4 மதகுகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையிலிருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மேட்டுப்பாளையம் தாசில்தார் ‌ஷர்மிளா ஆகியோர் இரவோடு இரவாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளை பார்வையிட்டனர். கரையோர பகுதியில் வசிப்பவர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமண மண்டபங்களை பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் கூறியதாவது: பவானி ஆறு பாய்ந்தோடி செல்லும் தேக்கம்பட்டி, நெல்லிதுறை, மேட்டுப்பாளையம், ஆலாங்கொம்பு, சிறுமுகை ஆகிய ஆற்றின் கரையோரப் பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மேடான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் மற்றும் கிராமப்பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து ஒலிபெருக்கி மற்றும் தண்டோரா மூலம் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களை கொண்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கின்ற பொதுமக்களை தங்க வைப்பதற்காக மேட்டுப்பாளையத்தில் 7 திருமண மண்டபங்களும், 2 பள்ளிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே ஆற்றில் குளிக்கவோ துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே இன்று காலை பில்லூர் அணைக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியதையடுத்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory