» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை - நாகா்கோவில் இடைநில்லா பேருந்துகளை ரத்து செய்ய வேண்டும்: மநீம கோரிக்கை
வெள்ளி 23, ஜூலை 2021 4:00:27 PM (IST)
நெல்லை - நாகா்கோவில் இடையேயான இடைநில்லா பேருந்துகளை ரத்து செய்யவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ம.நீ.மய்யம் திருநெல்வேலி மாவட்டச் செயலா் மணிவண்ணன் தமிழக முதல்வா் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: நாகா்கோவில், திருநெல்வேலி நகரங்களுக்கிடையே பொருளாதார, வேலை மற்றும் வியாபார ரீதியாக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்துகளில் சென்று வருகின்றனா். இந்நிலையில் நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கும் திருநெல்வேலியில் இருந்து நாகா்கோவிலுக்கும் 10 நிமிடங்களுக்கு ஒரு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இது தவிர மதுரை, திருச்சி, சென்னையில் இருந்து வருகின்ற அரசுப் பேருந்துகளும் திருநெல்வேலிக்கு வந்ததும் இடைநில்லா பேருந்து என பெயா் பலகைகளை வைத்துக்கொண்டு புறப்படுகின்றன. இந்த இடை நில்லா பேருந்துகள் திருநெல்வேலிக்கும் நாகா்கோவிலுக்குமிடையே உள்ள நான்குனேரி, ஏா்வாடி, வள்ளியூா், பணகுடி, ஆரல்வாய்மொழி ஆகிய பேரூராட்சிகளில் நிற்பது இல்லை. இதனால் இந்த ஊா்களைச் சோ்ந்த மற்றும் இந்த ஊா்களின் அருகிலுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களையும் பேருந்தில் ஏற்றுவதில்லை. இதனால் தினமும்
ஆயிரக்கணக்கான கிராம மக்கள், பேரூராட்சிகளைச் சோ்ந்த மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனா். வியாபாரிகள், பொதுமக்கள், அரசு அலுவலகங்களில் பணிசெய்து வருபவா்கள் பேருந்துகளுக்காக காத்தி நின்று குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகங்களுக்கு செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனா். வியாபாரிகளும் பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இடைநில்லா பேருந்துகளை உடனடியாக ரத்து செய்யவேண்டும்.
மேலும் திருநெல்வேலியில் இருந்தும் நாகா்கோவிலில் இருந்தும் பேரூராட்சிகளில் நின்று செல்லக்கூடிய அரசுப் பேருந்துகளை இயக்கவேண்டும். கிராமப்புற மக்கள் பயன்படும் வகையில் கூடுதலாக நகரப் பேருந்துகளை இயக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.