» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: நடுக்கடலில் கொள்ளையர்கள் அட்டூழியம்

செவ்வாய் 31, ஜனவரி 2023 3:11:27 PM (IST)

ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் கன்னியாகுமரி  மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்தவர் ஜெஸ்லின். இவரது மகன் ராஜேஷ் குமார் (37). இவர், சின்னமுட்டம் கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ, செபாஸ்டின், பெரியக்காடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த கபிலன், நெல்லை மாவட்டம் பெருமணல் பகுதியை சேர்ந்த துரைராஜ் ஆகியோருடன் சவுதி அரேபியா நாட்டில் இருந்து விசைப்படகில் சென்று மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

கத்திப் என்ற பகுதியில் இருந்து சவுதி அரேபியா நாட்டின் காலம் ஹஸ்ஸான் என்ற அரேபிய முதலாளிக்கு சொந்தமான "ரஸ்மா அல் அவள்" என்ற விசைப்படகில் அவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்கள். கடந்த 22-ந் தேதி 5 மீனவர்களும் ஆழ்கடலிலே தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஈரான் கடல் கொள்ளையர்கள் திடீரென வந்தனர்.

அவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் படகுகளுக்குள் பதுங்கினார்கள். அப்போது கடல் கொள்ளையர்கள், மீனவர்களின் படகில் இருந்த மீன் பிடிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய ஜி.பி.எஸ். எக்கோ சவுன்டர், வயர்லெஸ் மற்றும் மீனவர்களின் செல்போன்கள், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் அனைத்தையும் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

அவர்கள் சென்றபிறகு, பதுங்கியிருந்த மீனவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது தான் தங்களது உடமைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. மேலும் மீனவர் ராஜேஷ் குமார் இடது கண்ணில் குண்டடிபட்டும், முகத்தின் காது, தொண்டை பகுதிகளில் காயங்களுடன் மயங்கி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கடல் கொள்ளையர்கள் தாக்குதல் குறித்து சவுதி அரேபியா கடலோர காவல் படையினருக்கு வயர்லெஸ் மூலம் தகவல் கொடுத்துள்ளனர். 

துப்பாக்கிச்சூட்டிலே அவர்கள் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ராஜேஷ் குமாரை மீட்டு சவுதி அரேபியா நாட்டின் மவுசட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அறிந்து சவுதி அரேபியா நாட்டில் தரின், கத்திப், ஜிபைல் போன்ற இடங்களிலே மீன்பிடி தொழில் செய்து கொண்டிருக்கக்கூடிய சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்நாடு, கேரளாவை சார்ந்த இந்திய மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் கடந்த 9 நாட்களாக கடலில் மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் உயிருக்கான பாதுகாப்பை சவுதி அரேபியா அரசு உறுதி செய்யும் வரை நாங்கள் மீன்பிடிக்க செல்ல மாட்டோம் என்று போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு முன்பும் கடற்கொள்ளையர்கள் சவுதி அரேபியா கடலுக்குள் வந்து மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 2000-மாவது ஆண்டு மகிமை என்ற குமரி மீனவரும், 2007-ம் ஆண்டு மணக்குடியை சார்ந்த பணி அடிமை என்ற மீனவரும் 2010-ம் ஆண்டு குறும்பனையை சேர்ந்த குமார் என்ற மீனவரும் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory