» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குளச்சல் அருகே 57 வயது பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் : வாலிபர் கைது!
திங்கள் 16, மே 2022 5:35:13 PM (IST)
குளச்சல் அருகே 57 வயது பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 22 வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் இரும்புலி பகுதியை சேர்ந்த 57 வயதுடைய பெண் ஒருவர், நேற்று முன்தினம் காலையில் பாம்பூரி வாய்க்காலில் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது குளச்சல் நரிக்கல் அடுத்த வெள்ளியாக்குளம் பகுதியை சேர்ந்த சிவா (22) என்பவர், அந்த பெண்ணின் வாயை பொத்தி வாய்க்காலின் மறுகரைக்கு கடத்திகொண்டு சென்று கீழே தள்ளி கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
பெண்ணின் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் திரண்டனர். உடனே, சிவா, பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் குளச்சல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஜோஸ்லின் ஆகியோர் விசாரணை நடத்தி கடத்தல், பலாத்கார முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர். கைதான சிவா மீது ஏற்கனவே குளச்சல், குளச்சல் அனைத்து மகளிர், மண்டைக்காடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.