» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப்பதியில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

செவ்வாய் 25, ஜனவரி 2022 11:18:25 AM (IST)



சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. 

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது. விழாவின் 8-வது நாளில் அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 9 மற்றும் 10-ம் திருவிழாக்களில் இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. 

விழாவின் 11-ம் நாளான நேற்று மதியம் 12 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து உகப்படிப்பும் நடந்தது. பகல் 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல்லக்கு வாகனத்தில் தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது. 

தேரோட்ட நிகழ்ச்சிக்கு பால. ஜனாதிபதி தலைமை தாங்கினார். பால. லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அய்யா வழி பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முத்து குடைகளும், மேளதாளங்களும் முன்செல்ல தேரோட்டம் தொடங்கியது. தலைமைப்பதி முன்பு இருந்து புறப்பட்ட தேர் கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமை பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது.

வடக்கு வாசல் பகுதியில் அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவை அடங்கிய பொருட்களை சுருளாக படைத்து வழிபடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அங்கு பக்தர்களின் சுருள் ஏற்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குதலும் நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன், ஒன்றிய வேளாண்மை குழு தலைவர் தாமரை பாரதி, ஒன்றிய குழு தலைவர் அழகேசன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாலை 6 மணியளவில் தேர் நிலைக்கு வந்தது. 

தேரோட்ட நிகழ்ச்சியில் அய்யாவழி பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். திருத்தேர் பணிவிடைகளை ஜனா.யுகேந்த், ஜனா.வைகுந்த், பையன் நேம்ரிஸ் ஆகியோர் செய்திருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு தலைமைப்பதியின் கிழக்கு வாசல் முன்பு அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு காலை மற்றும் மதியம் வேளைகளில் இலவச உணவு வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி ரிஷப வாகனத்தில் தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory