» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கோதுமை ஏற்றுமதிக்கு தடை.. இந்தியாவுக்கு சீனா ஆதரவு - ஜி7 நாடுகள் மீது விமர்சனம்!
திங்கள் 16, மே 2022 5:47:02 PM (IST)
கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.
நாட்டில் விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. ஏற்றுமதியை நிறுத்தி வைப்பது மூலம் அத்தியாவசிய உணவு தானியங்களில் ஒன்றான கோதுமை விலையை குறைக்க முடியும் என அரசு கருதுகிறது. இந்தாண்டில் ஒரு கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென அந்த திட்டத்தை அரசு கைவிட்டுள்ளது.
இந்திய அரசின் முடிவுக்கு ஜி 7 நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியாவின் முடிவால் உலகெங்கும் உணவுப் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்தனர். எல்லா நாடுகளும் உள்நாட்டு உணவு பாதுகாப்பு என்ற பெயரில் ஏற்றுமதியை நிறுத்தினால் உலகளவில் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு அதிகரிக்கும் என ஜெர்மனி விவசாய அமைச்சர் கெம் ஆஸ்டெமிர் தெரிவித்தார்.
இந்நிலையில், கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. சீன நாட்டின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் நாளிதழில் வெளியிட்டுள்ள கட்டுரையில், இந்தியாவுக்கு ஆதரவாகவும் ஜி 7 நாடுகளை விமர்சித்தும் எழுதப்பட்டுள்ளது.
குளோபல் டைம்ஸ் நாளிதழில் வெளியிட்டுள்ள கட்டுரையில், "இந்தியாவை குற்றம் சாட்டுவது உணவு பிரச்சினைக்கு தீர்வாகாது. கோதுமை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கக்கூடாது எனக் கூறும் ஜி 7 நாடுகளின் விவசாயத்துறை மந்திரிகள், உணவு சந்தை விநியோகத்தை நிலைப்படுத்தும் விதமாக தங்கள் நாட்டு கோதுமை ஏற்றுமதியை ஏன் அதிகரிக்கக்கூடாது?
உலகில் அதிக அளவில் கோதுமை ஏற்றுமதி செய்யும் 2-வது நாடாக இந்தியா இருந்தாலும், சர்வதேச கோதுமை ஏற்றுமதி சந்தையில், இந்தியாவின் பங்கு சிறிய அளவே உள்ளது. முரண்பாடாக சில வளர்ந்த பொருளாதார நாடுகளான அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆஸ்திரேலியே ஆகிய நாடுகள் கோதுமை ஏற்றுமதியில் முன்னணி வகிக்கின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.