» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆன்டனியோ கட்டிரெஸ் வருகையின்போது ரஷியா ஏவுகணை தாக்குதல்: ஐ.நா. குழுவினர் அதிர்ச்சி!!

வெள்ளி 29, ஏப்ரல் 2022 12:09:23 PM (IST)



ஐ.நா. தலைவர் ஆன்டனியோ கட்டிரெஸ், கீவ் நகருக்கு வந்தபோது ரஷிய படைகள் ராக்கெட் தாக்குதலை நடத்தியதில் 10 பேர் காயமடைந்தனர்.

உக்ரைன் மீது ரஷியா 2 மாதங்களுக்கும் மேலாக தாக்குதலை தொடுத்து போரில் ஈடுபட்டு வருகிறது. போரை ரஷியா கைவிட வேண்டும் என ஐ.நா. அமைப்பு வலியுறுத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவதில் சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகள் வலியுறுத்தியும் அதில் பலனில்லை.  

இந்த நிலையில், மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து விட்டு ஐ.நா. சபை பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெஸ் உக்ரைன் சென்றார். அவர் புச்சா நகரில் ஏராளமானோரை கொன்று புதைத்துள்ள புதைகுழிகளை பார்வையிட்டு வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சர்வதேச கிரிமினல் கோர்ட்டு விசாரணை நடத்துவதற்கு தனது ஆதரவை தெரிவித்ததுடன், ரஷியா இதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது பற்றி அவர் கூறும்போது, சந்திப்புகளால் போர் முடிவுக்கு வந்து விடாது. போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா முடிவு எடுக்கிற வரையில் போர் முடிந்து விடாது என குறிப்பிட்டார். உக்ரைன் போரில் இதுவரை 2,829 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 3,180 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், உக்ரைனின் தலைநகர் கீவ் நகரின் மைய பகுதியில் ஐ.நா. தலைவர் வருகையையொட்டி, ரஷியாவின் ஏவுகணைகள் வான்வழி தாக்குதலை தொடுத்தன. இதனை தொடர்ந்து பலத்த சத்தம் எழுந்தது.  நேற்று மாலை 5.15 மணியளவில் நடந்த இந்த தாக்குதலால் ஐ.நா. தலைவரும், அவரது குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

25 அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடந்த தாக்குதலால் 2 தளங்கள் சேதமடைந்தன.  கட்டிடத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து, கரும்புகை வான்வரை சென்றது.  தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர்.  இதுபற்றி ஐ.நா.வின் மனிதநேய அலுவலகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி சவியானோ ஆப்ரூ செய்தியாளர்களிடம் கூறும்போது, அது ஒரு போர் மண்டலம்.  ஆனால், எங்களுக்கு மிக அருகில் தாக்குதல் நடந்தது அதிர்ச்சி அளித்தது என கூறியுள்ளார்.

நாங்கள் அனைவரும் பாதுகாப்புடனேயே இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.  தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து 3.5 கி.மீ. தொலைவில் கட்டிரெஸ் மற்றும் ஜெலன்ஸ்கி இருவரும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த இருந்தனர்.  அதற்கு ஒரு மணிநேரத்திற்கும் குறைவாக இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இதுபற்றி கூறிய ஜெலன்ஸ்கி, நாங்கள் (கட்டிரெஸ் உடன்) கீவ் நகரில் பேசி முடித்ததும் உடனடியாக ரஷியாவின் 5 ஏவுகணைகள் நகரில் வந்து விழுந்தன என்று கூறியுள்ளார்.ஐ.நா. மற்றும் அந்த அமைப்பினை ரஷிய தலைமை அவமதிக்கிறது என்பதற்கு இந்த தாக்குதலே அதிக விளக்கம் அளிக்கும் என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்சி ரெஜினிகோவ் கூறும்போது, பாதுகாப்பு செயலாளரின் பாதுகாப்பு மீது மற்றும் உலக பாதுகாப்பு மீது நடந்த தாக்குதல் இது என கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory