» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆப்கானில் அனைத்து மாணவிகளும் பள்ளிக்கு செல்ல அனுமதி : தலீபான்கள் அரசு அறிவிப்பு
செவ்வாய் 25, ஜனவரி 2022 5:18:34 PM (IST)
ஆப்கானிஸ்தானில் மார்ச் 21 முதல் அனைத்து மாணவிகள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிக்கு பின் பெண்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அமல்படுத்தி வருகிறது. பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, வெளியே தனியாக நடமாடக் கூடாது போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தனியார், அரசு அலுவலகங்களில் பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை. பள்ளிகள், கல்லூரிகள், மதராசாக்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மாணவிகள், ஆசிரியைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கான் பெண்கள் தலீபான்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களை கல்வி நிலையங்களுக்கு செல்ல அனுமதிக்கும்படி கல்லூரி மாணவிகளும், சிறுமிகளும் நடத்திய போராட்டம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. இதன் விளைவாக உலக நாடுகள் தலீபான்கள் தலைமையிலான அரசுக்கு கண்டனம் தெரிவித்து வந்ததை தொடர்ந்து பெண்களுக்கு எதிரான சில கட்டுபாடுகளை தலீபான்கள் தளர்த்த தொடங்கினர்.
அந்த வகையில் சில மாகாணங்களில் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், பெரும்பாலான மாகாணங்களில் 7-ம் வகுப்புக்கு மேலே உள்ள வகுப்புகளில் மாணவிகள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. தலைநகர் காபுலில் தனியார் அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்நிலை பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவிகள் கல்வி பயில எந்த தடையையும் தலீபான்கள் விதிக்கவில்லை.
ஆனால், நாட்டின் பிற மாகாணங்களில் மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல தலீபான்கள் தடை விதித்துள்ளனர். இந்நிலையில், வரும் மார்ச் 21-ம் தேதிக்கு பின்னர் மீண்டும் அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தலீபான்கள் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தாலீபானின் கலாசார துறை மந்திரி கூறுகையில், ஆப்கானிஸ்தான் புத்தாண்டை தொடர்ந்து வரும் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவிகள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்’ என தெரிவித்தார்.