» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வளரும் நாடுகளுக்கு பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ளது: பிரதமர் மோடி உரை!!
செவ்வாய் 2, நவம்பர் 2021 3:49:04 PM (IST)
இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ளது என கிளாஸ்கோ மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரை: சர்வதேச பருவநிலை மாற்ற விவாதத்தில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம், நமது செயல்பாடுகள் மற்றும் அமைப்புகளை மாற்றும் பருவநிலை மாற்ற தழுவலுக்கு அளிக்கவில்லை. பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளுக்கு இது அநீதி ஆகும்.
பல பாரம்பரிய சமூகங்கள் இயற்கையோடு இயைந்து வாழும் அறிவு பெற்றுள்ளன. நமது தழுவல் கொள்கைகளில், பாரம்பரிய நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இந்த அறிவு அடுத்த தலைமுறைக்கு சென்றடைவதை உறுதி செய்ய, பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் விவசாயிகளுக்கு பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ளது. பயிர் செய்யும் முறை மாறுகிறது. சரியான பருவத்தில் பெய்யாத மழை, வெள்ளம் மற்றும் தொடர் புயல் பயிர்களை அழிகின்றன. குடிநீர் ஆதாரங்கள் முதல் மலிவு விலை வீடுகள் வரை அனைத்தும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான தன்மை கொண்டதாக மாற்றப்பட வேண்டும்.
பருவநிலை மாற்ற தழுவலை நமது கொள்கைகளின் மிக முக்கியமான பகுதியாக மாற்ற வேண்டும். இந்தியாவில், அனைவருக்கும் குழாய் நீர், தூய்மை இந்தியா திட்டம் மற்றும் அனைவருக்கும் சுத்தமான சமையல் எரிபொருள் போன்ற கொள்கைகள், தேவைப்படுபவர்களுக்கு பருவநிலை மாற்ற தழுவலின் நன்மைகளை வழங்குவதோடு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தியுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.