» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கோவிட் வைரஸ் பரவல் நீண்ட காலத்திற்கு தொடரும்: உலக சுகாதார அமைப்பு
செவ்வாய் 28, செப்டம்பர் 2021 5:29:48 PM (IST)
கோவிட் வைரஸ் பெருந்தொற்று பரவல் நீண்ட காலத்திற்கு தொடரும் என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்ட கோவிட் வைரஸ் தொற்று, தற்போது வரை உலகையே உலுக்கி வருகிறது. இந்நிலையில், கோவிட் வைரஸ் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த பூனம் கெத்ரபால் சிங் தெரிவித்து உள்ளதாவது: கோவிட் வைரஸ் பெருந்தொற்று நீண்ட காலத்திற்கு பரவும். முதல், 2வது அலைகளின் போது ஏற்பட்ட நோய்த்தொற்று மற்றும் தடுப்பூசி பயன்பாடு கோவிட் வைரசுக்கு எதிரான எதிர்ப்புத் திறனை அடைய உதவலாம். ஆனாலும், உலக நாடுகள் வலுவான பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
பொதுசுகாதாரத்தை முதன்மையான ஒன்றாக உலக நாடுகள் கருத வேண்டும். அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சுகாதாரக் கட்டமைப்புகளை உருவாக்குவது கடுமையான சூழல்களில் மக்களைக் காக்க இன்றியமையாத ஒன்றாக அமையும். மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்தல் மட்டும் போதாது. தனிமனித இடைவெளிகளைப் பின்பற்றுதல், முகக்கவசங்களை அணிதல், கிருமி நாசினிகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றை தவறாமல் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.