» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரம்: 7 பேர் பலி; 3 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்!
சனி 6, ஜூன் 2026 11:54:23 AM (IST)

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த 4-ம் தேதி தொடங்கியது முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து அதிபலத்த கனமழை பெய்து வருகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமான மிக அதிபலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், கேரளாவின் வட மாவட்டங்களான காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (ஜூன் 6) இந்திய வானிலை மையம் 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் மூலம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் 12 முதல் 20 சென்டி மீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் அம்மாநிலங்களுக்கு 'ஆரஞ்சு எச்சரிக்கை' (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த நாட்களுக்கான வானிலை நிலவரம்:
நாளை (ஜூன் 7): வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்குச் 'சிவப்பு எச்சரிக்கை'யும் (Red Alert); காசர்கோடு, கண்ணூர், பாலக்காடு, திருச்சூர், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு 'மஞ்சள் எச்சரிக்கை'யும் (Yellow Alert) விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (ஜூன் 8): மழையின் தீவிரத்தைப் பொறுத்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
தொடர்மழை காரணமாகக் கேரளக் கடற்கரை மற்றும் அரபிக்கடல் பரப்பில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் உச்சகட்டமாக 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் யாரும் எக்காரணம் கொண்டும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கறாரான எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறும், தாழ்வான மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் மாநிலப் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மழை விபத்துகளில் 7 பேர் பலி:
மாநிலம் முழுவதும் தொடர்ந்து கொட்டி வரும் கனமழையின் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் வாகன விபத்துகள், மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்த விபத்துகள் மற்றும் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்த விபத்துகள் போன்ற பல்வேறு மழைக்கால விபத்துகளில் சிக்கி இதுவரை 7 பேர் பரிதாபமாகப் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த 2 நாட்களுக்கு மழையின் தாக்கம் மிகத் தீவிரமாக இருக்கும் என்பதால் மக்கள் அனைவரும் தகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை! புதிய மசோதா தாக்கலாகிறது!
ஞாயிறு 19, ஜூலை 2026 1:30:06 PM (IST)

தனியார் பங்களிப்புடன் விண்வெளி ஆய்வு: சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய விக்ரம்-1!
சனி 18, ஜூலை 2026 4:06:16 PM (IST)

21-வது நாள் நாளாக உண்ணாவிரதப் போராட்டம் : சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி!
சனி 18, ஜூலை 2026 12:40:37 PM (IST)

ஒருதலைக் காதல் விவகாரம்: பேருந்து நிலையத்தில் இளம்பெண் வெட்டிக்கொலை!
வெள்ளி 17, ஜூலை 2026 4:18:12 PM (IST)

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
வெள்ளி 17, ஜூலை 2026 12:31:26 PM (IST)

நீட் விவகார உண்ணாவிரதப் போராட்டம்: சோனம் வாங்சுக் உடல்நிலை 19வது நாளில் கவலைக்கிடம்!
வியாழன் 16, ஜூலை 2026 4:05:48 PM (IST)


