» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது : காங்கிரஸ் அறிக்கை!

வெள்ளி 14, நவம்பர் 2025 5:52:00 PM (IST)

ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டு பீகார் சட்டமன்ற தேர்தலை நடத்தியிருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. தேர்தலை ஒட்டி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தேசியளவில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், பீகாரில் மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

அங்கு கடந்த நவம்பர் 6 ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும், நவம்பர் 11 ஆம் தேதி 122 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது. கடந்த 75 வருட பீகார் அரசியலில் இல்லாதளவுக்கு 66.91 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. ஆளும் ஜேடியூ, தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கவும், மறுபக்கம் ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிப்பதற்கும் முயற்சி செய்கின்றனர்.

பீகாரில் 122 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கும். தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் நிதிஷ் - பாஜக கூட்டணியே மீண்டும் அரியணை ஏறும் என்று கூறப்பட்டது. அதை போலவே வாக்கு எண்ணிக்கையில் நிதிஷ் - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்கள்.

ஆட்சி அமைப்பதற்கு தேவையான எண்ணிக்கையைவிட சுமார் 190 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஆர்ஜேடி வாக்கு சதவீத அடிப்படையில் (23 சதவீதம்) மற்ற கட்சிகளை விட முன்னிலையில் இருந்தாலும், அவர்களின் கூட்டணி சுமார் 50 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறார்கள்.

இதன்மூலம் பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தன் எக்ஸ் பக்கத்தில், "நீங்கள் வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டு, அதிலும் பெரும்பான்மையான எதிர்க்கட்சி வாக்காளர்களை நீக்கிவிட்டு தேர்தல் முடிவுகளில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

போட்டி தொடங்குவதற்கு முன்பே இதுபோன்ற ஆடுகளத்தை தயார் செய்தால், ஜனநாயகம் நசுங்கிவிடும். என்றார். காங்கிரஸ் கட்சியின் மற்றொரு நிர்வாகி உதித் ராஜ், இது வாக்காளர்கள் கொடுத்த வெற்றி இல்லை. தேர்தல் ஆணையம் மற்றும் SIR மூலமாக கிடைக்க பெற்ற வெற்றி. இது ஜனநாயக படுகொலை." என்று கூறியுள்ளார்.

பாஜக மறுப்பு: இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக நிர்வாகி அருண்குமார், "பீகார் மக்கள் இந்தியா கூட்டணியை விரும்பவில்லை. அதனால் தான் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். தோல்வி விரக்தியில் இதுபோன்ற கருத்துகளை கூறி வருகிறார்கள். பீகார் மக்கள் முன்னேற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்." என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory