» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கோதுமை ஏற்றுமதிக்கு தடை: விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!!
சனி 14, மே 2022 3:47:34 PM (IST)
கோதுமை ஏற்றுமதியை தடை செய்வது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் ‘‘பல காரணங்களினால், சர்வதேச அளவில், கோதுமை விலை திடீரென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் உணவு பாதுகாப்பும், அண்டை நாடுகள், அதிகம் பாதிப்பை சந்திக்கும் நாடுகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, கோதுமையை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் மத்திய அரசின் இந்த முடிவை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ளதாவது:
மத்திய அரசு போதுமான அளவு கோதுமையை கொள்முதல் செய்ய தவறியதே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். சரியான அளவில் கொள்முதல் நடந்திருந்தால், கோதுமை ஏற்றுமதியை தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. கோதுமை ஏற்றுமதியை தடை செய்வது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை. அதிக ஏற்றுமதி விலையின் பயன்கள் விவசாயிகளுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. இந்த நடவடிக்கையால் ஆச்சரியம் அடையவில்லை. இந்த அரசு விவசாயிகளிடம் ஒருபோதும் நட்புடன் இருந்ததில்லை. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.