» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
திரிபுரா முதல்வருக்கு எதிராக வீடியோ வெளியீடு: கொலை முயற்சி வழக்கில் நடிகை அதிரடி கைது
செவ்வாய் 23, நவம்பர் 2021 12:06:15 PM (IST)
திரிபுராவில் முதல் அமைச்சருக்கு எதிராக வீடியோ வெளியீட்ட விவகாரத்தில் கொலை முயற்சி வழக்கில் நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் பாஜ ஆட்சி நடக்கிறது. அங்கு பாஜ, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில், திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது பெங்காலி நடிகையும், மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவருமான சாயோனி கோஷ் அந்தப் பக்கமாக காரில் சென்றார்.
வரும் 25ம் தேதி அகர்தலாவில் மாநகராட்சி தேர்தல் நடப்பதை முன்னிட்டு, முதல்வர் பிப்லப் தேவ் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் 50 பேருக்கும் குறைவானவர்களே கலந்துகொண்டனர். இதையடுத்து சாயோனி கோஷ், ‘எங்கள் வேட்பாளரின் கூட்டங்களில் இதைவிட அதிகமானோர் கலந்துகொள்கின்றனர். பாஜ ஆட்சி முடிவுக்கு வருகிறது’ என்று டிவிட்டரில் பதிவிட்டு, அதனுடன் ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், முதல்வர் பிப்லப் தேவ் வீட்டின் முன்பு போராட்டம் நடத்திய சாயோனி கோஷை கைது செய்த போலீசார், உடனே அவரை அகர்தலாவில் உள்ள மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சாயோனி கோஷை சந்திக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் காவல் நிலையத்துக்கு வந்தனர். உடனே போலீசார் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர். இதனால் காவல் நிலையத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து திரிபுரா கூடுதல் எஸ்.பி (நகர்புறம்) ஜகதீஷ் ரெட்டி கூறுகையில், ‘பாஜ தொண்டர் ஒருவரை கொல்ல முயன்றதாக, ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளில் நடிகை சாயோனி கோஷ் உள்பட திரிணாமுல் கட்சியை சேர்ந்த சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை கண்டித்து சாயோனி கோஷ் தலைமையிலான திரிணாமுல் கட்சியினர் மாநில முதல்வரின் வீட்டுக்கு முன்பு போராட்டம் நடத்த முயன்றனர். அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்’ என்றார்.