» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மருத்துவமனையில் தீ விபத்தில் 4 குழந்தைகள் பலி: மத்திய பிரதேச மாநிலத்தில் சோகம்!
செவ்வாய் 9, நவம்பர் 2021 5:46:01 PM (IST)
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் வார்டில் சிகிச்சைப் பெற்ற 4 குழந்தைகள் பலியாகினர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மிகப்பெரிய அமைப்பு ஹமீதியா ஹாஸ்பிடல். இந்தக் குழுமத்தில் ஒன்றாக கமலா நேரு குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. இந்தக் குழந்தைகள் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் நலனுக்கு என தனி வார்டு உள்ளது. அந்த வார்டில் நான்கு குழந்தைகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தன. திங்கட்கிழமை இரவு அந்த வார்டில் திடீரென தீப்பற்றி கொண்டது.
மின்சார ஷார்ட் சர்க்யூட் காரணமாக மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் தீப்பற்றியது என்று மருத்துவக் கல்வி அமைச்சர் விசுவாஸ் சராங் தெரிவித்தார். மூன்றாவது மாடியில் தீப்பிடித்த தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து சென்றோம். அங்கு விளக்கு எரியவில்லை இருள் சூழ்ந்து கிடந்தது. அங்கு இருந்த குழந்தைகளை அருகிலுள்ள வார்டுக்கு மாற்றினோம். ஆனாலும் அந்தக் குழந்தைகளை காப்பாற்ற இயலவில்லை.
மருத்துவமனையில் 9 மணிக்கு தீப்பற்றி கொண்டதாக தகவல் வந்தது உடனே 10 தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்பட்டன என்று தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார். தீயணைக்கும் பணி விரைவாக நடந்தது ஆனாலும் குழந்தைகளை காப்பாற்ற இயலவில்லை குழந்தைகளை இழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் என்று மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் தெரிவித்தார்.
இந்த தீ விபத்து குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் மாநில முதல்வர் அறிவித்தார். இந்த விபத்து பெரிதும் துயரம் அளிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவரான கமல்நாத் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார் மாநில பாஜக தலைவர் விஷ்ணு தத் சர்மாவும் தீ விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணம் பெற வாழ்த்துவதாக அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.