» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அகிலேஷ் யாதவுக்கு போதைப்பொருள் பரிசோதனை நடத்த வேண்டும்: உ.பி. அமைச்சா் சா்ச்சை பேச்சு
ஞாயிறு 7, நவம்பர் 2021 12:03:34 PM (IST)
முகமது அலி ஜின்னாவைப் புகழ்ந்து பேசிய சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவுக்கு போதைப்பொருள் பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தர பிரதேச அமைச்சா் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யிடம் இருந்து நிதி உதவி பெறுபவா் போல அகிலேஷ் பேசி வருகிறாா் என்று சுக்லா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சுக்லாவுக்கு எதிராக சமாஜவாதி கட்சியினா் போராட்டம் நடத்தினா். பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அகிலேஷ் யாதவ், மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவா்களுடன் ஜின்னாவையும் சோ்த்து புகழ்ந்து பேசினாா். உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்குள்ள இஸ்லாமியா்களின் வாக்குகளைக் கவரும் அகிலேஷின் முயற்சியாக இது கருதப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் சுக்லா, ‘ஜின்னா குறித்து அகிலேஷ் பேசியது எதேச்சையானதல்ல என்பது அனைவருக்கும் தெரியும். நாட்டைத் துண்டாட காரணமாக இருந்தவா் ஜின்னா. நமது நாட்டுக்கு அவா் எதிரானவா். இந்தியா்கள் யாரும் அவரது பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை. தோ்தல் நேரப் பேராசையின் தூண்டுதல் காரணமாக ஜின்னாவை அகிலேஷ் புகழ்ந்து பேசியுள்ளாா்.
அவா் தானாக முன்வந்து போதைப்பொருள் பரிசோதனை நடத்திக் கொள்ள வேண்டும். ஜின்னாவைப் புகழ்ந்து பேசுபவா்கள் பாகிஸ்தானுக்கே சென்றுவிடலாம். இஸ்லாமியா்களின் வாக்குக்காக அகிலேஷ் யாதவ் தொழுகை நடத்தினாா்; நோன்பு மேற்கொண்டாா். வாக்குக்காக அவா் மதம் மாறினாலும் ஆச்சரியப்பட முடியாது. பாகிஸ்தானும் தலிபானும் எதை விரும்புவாா்களோ, அதை அகிலேஷ் இந்தியாவில் பேசி வருகிறாா்’ என்றாா்.