» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு
சனி 23, அக்டோபர் 2021 8:54:16 PM (IST)
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு மேற்கொண்டார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வெளி மாநில மக்களை குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால், அங்கு தங்கி பணி புரிந்து வந்த வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, ஜம்மு - காஷ்மீருக்கு சென்றுள்ளார். ஸ்ரீநகருக்கு தனி விமானத்தில் சென்ற அமித் ஷாவை, கவர்னர் மனோஜ் சின்ஹா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதையடுத்து, அமித்ஷா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதம், அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதல், பயங்கரவாதிகளுடனான நீண்ட காலம் நீடிக்கும் துப்பாக்கிச்சண்டை ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. குப்கர் சாலையில் உள்ள ராஜ்பவனில் அமித்ஷா தங்க உள்ளதை தொடர்ந்து, ராஜ்பவனில் இருந்து 20 கி.மீ., சுற்றளவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.